• Monday, March 27, 2017

    திருக்கானூர் - Tirukkanur

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
        🌸 திருக்கானூர். 🌸 (Tirukkanur)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

    இறைவன்:
    செம்மேனி நாதர், கரும்பேஸ்வரர்.

    இறைவி: சிவலோக நாயகி.

    தலமரம்: பனைமரம், வில்வமரம்.

    தீர்த்தம்: கொள்ளிடம், பரசுராமர் தீர்த்தம்.

    சோழநாட்டின் காவிரி வடகரையில் அமையப்பெற்றுள்ள 63 தலங்களுள், 56 - வது தலமாகப் போற்றப்படுகிறது.

    இருப்பிடம்:
    திருக்கண்டியூரிலிருந்து,  சிவலாயத்திற்கு நேரான திசையில் செல்லும் திருக்காட்டுப் பள்ளிச் சாலையில் சென்று திருக்காட்டுப் பள்ளியை அடைந்து, அங்கிருந்து காவிரிப் பாலத்தைத் தாண்டி, மயிலாடு துறை பாதையில் சிறிது தூரமே வந்து, உடனே இடப்புறமாகப் பிரியும் விஷ்ணம்பேட்டை சாலையில் திரும்பிச் சென்று, விஷ்ணம்பேட்டையை அடைந்து, பேருந்தை விட்டு இறங்கி, திருக்கானூர் கோயிலுக்குச் செல்லபம் வழியைக் கேட்டுக் கொண்டு, அச்சாலையில் (மண் சாலையில்) நடந்து செல்ல வேண்டும்.

    வயல்களின் நடுவே செல்லும் இச்சாலையின் முடிவில் மக்கள் குடியிருக்கும் பக்தி வரும்.

    அங்கிருந்து மணலில் கொஞ்ச தூரம் நடந்தால் மேடான பகுதி வரும். அம்மேட்டுப் பகுதியைக் கடந்து கொள்ளிடக் கரைமீதேறி  வலப்புறமாகத் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம்.

    பெயர்க் காரணம்:
    1924-ஆம் ஆண்டு வாக்கில் வெள்ளம் வந்த போது, கோயில் முழுமையும் வெள்ளத்டால் மூழ்கடிக்கப்பட்டுப் போனது.

    மூழ்கடிக்கப்பட்ட கோயில் உயர உச்சியில் ஒரு கரும்பு மட்டுமே முளைத்திருந்தன.

    ஒற்றைக் இக்கரும்பு முளைத்திருப்பதைக் கண்ட திரு. என். சுப்பிரமணிய ஐயர், அக்கரும்பின் தூர்பகுதியைத் தோண்டிப் பார்த்தார்.

    மணலை விலக்கியதும் உள்ளே கோயில் இருப்பதுக்குண்டான தடயத்தைக் கண்டார்.

    இதனால் பெருமானுக்கு கரும்பேஸ்வரர் என்று பெயராயிற்று.

    திருக்கானூர் என்னும் ஊர்ப் பெயர் மாறி, இன்று மக்கள் குடியிருப்பு ஒரு சிலவே இருப்பதாலும், மணற்பகுதியை அடுத்திருப்பதாலும் இவ்விடத்தை மணல்மேடு என்றே வழங்கி வருகின்றனர்.

    தேவாரம் பாடியவர்கள்:
    சம்பந்தர் 1-ல் ஒரே ஒரு பதிகமும்,
    அப்பர் 5-ல் ஒரே ஒரு பதிகமும், ஆக மொத்தம் இரண்டு பதிகங்கள்.

    கோவில் அமைப்பு:
     கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜ கோபுரம்.

    பிரகாரத்தில் விநாயகரும், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர்,  மகாவிஷ்ணு, அய்யனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியார் இருக்கிறார்கள்.

    உள்ளிடம் விசாலமாக இருக்கின்றது.

    சுற்றிலுமுள்ள மதிற்ச் சுவர்களும் கோயிலும் நன்கு அழகுறக் காட்சி தருகின்றன.

    அழகான தோற்றத்துடன் மூலவர் மூர்த்தி காட்சி தருகிறார்.

    விமானம் -ஏகதளம்- உருண்டை வடிவத் தன்மையுடன் காட்சியளிக்கிறது.

    அம்பாள் சாளக்ராம விக்ரஹம்.

    தெற்குப் பார்த்த சந்நிதி.

    மூடுதளத்துடன் கூடிய மகாமண்டபம், மற்றும் அர்த்த மண்டபம்.

    தல அருமை:
    ஒருமுறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க என்னமேற்பட, பூமிக்கு வந்தாள்.

    தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தாள்.

    அவ்விடத்திலமர்ந்து கடுமையாக தவத்தை கடைப்பிடித்தாள்.

    தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அக்னி பிழம்பாகக் காட்சி தந்தார்.

    இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர் ஆனார்.

    அம்மன் சிவயோகநாயகி ஆனார்.

    கணவனும், மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்கள், ஒற்றுமை ஏற்பட்டு இணைவர்.

    கரிகாற் சோழன் வாழ்ந்த ஊர் இது.

    ஒரு சமயம் கரிகாற்சோழனின் தாய் எதிரிகளுக்குப் பயந்து தன் மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

    சோழ நாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தால் பட்டத்து யானை அரசாட்சிக்குரியவரை தேடி வந்தது.

    அப்போது திருக்கானூரில் விளையாடிக் கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றிக் கொண்டு உறையூருக்குள் நுழைந்தது.

    சோழ மன்னன் ஆனான் கரிகாலன்.

    பங்குனி மாதத்தில் (ஏப்ரல் 2,3,4 ஆகிய தேதிகளில்) இறைவனுக்கு சூரிய பூஜை சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

    தல பெருமை:
    ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் பரசுராமர்.

    ஒரு முறை பரசுராமர் இல்லாத போது, கார்த்தவீரயார்ச்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனுவை பலவந்தமாகக் கவர்ந்து சென்றார்.

    திரும்பி வந்த பரசுராமர் நடந்ததைக் கேட்டு, கோபமடைந்து கார்த்தவீரயார்ச்சுனனை கொன்று பசுவை மீட்டெடுத்து வந்தார்.

    அத்துடன் இருபத்தோர் சத்திரியர்களையும் கொன்றார்.

    இதனால் இவருக்கு சத்திரிய தோஷம் ஏற்பட்டது.

    இந்த தோஷத்தைப் போக்குவதற்காக பரசுராமர் இத்டலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார்.

    சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப் பெற்றார்.

    திருவிழாக்கள்:
    ஆண்டு தோறும் பங்குனி மாதத்டில் (ஏப்ரல் 2, 3, 4 ஆகிய தேதிகளில்) இறைவனுக்கு சூரிய பூஜை சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

    ஆவணி மூலம், தை பெளர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    கல்வெட்டுக்கள்:
    இத்தலம் வடகரை ராஜராஜ வளநாட்டுப் பொய்கையூர் நாட்டு பணி பதி மங்கலமாகிய கரிகாலசோழ சதுர்வேதி மங்கலத்துத் திருக்கானூர் என்று கல்வெட்டில் காணப்பெறுகின்றது.

    அப்பர் 5-ஆம் திருமுறை.

    திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை

    உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலம்

    கருவ னாகி முளைத்தவன் கானூரில் பரம னாய பரஞ்சுடர் காண்மினே.

    பூஜை:
    சிவாகம முறையில் இரண்டு கால பூஜை.

    காலை 10-00 மணி முதல் பகல் 11.30 மணி வரை.

    மாலை 3.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

    அஞ்சல் முகவரி:
    அருள்மிகு. திருக்கானூர் செம்மேனிநாதர் திருக்கோயில்.
    விஷ்ணம் பேட்டை &
    அஞ்சல்- 613 105
    (வழி) திருக்காட்டுப்பள்ளி. தஞ்சை மாவட்டம்.

    தொடர்புக்கு:
    04362--320067
    93450 09344

    Address:
    Sri. Tirukkanur Cemmeninatar Temple

    Vishnampettai - 613 105
    (Way) Tirukkattuppalli. Thanjavur District.

    Phone/Mobile : 04362-320067 / 9345009344

            திருச்சிற்றம்பலம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Powered by Blogger.